First Graduates from Bettatti
Best Practices of PUMS Bettatti
பண்புள்ள பட்டதாரிகளை படைக்க இலட்சிய பாதை
முன்னுரை :
ஊ.ஒ.ந.நி. பள்ளி, பெட்டட்டி, குன்னூரில் அண்ணாநகர், அம்பேத்கார் நகர், சுங்கம் போன்ற காலனி பகுதிகளிலிருந்து 1936 ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருந்தும் 2014 வரை ஒரு பட்டதாரி வெளிவராதது என்பது வேதனைக்குரிய விஷயம். இதற்கு காரணம் அவர்களுடைய சமூக, பொருளாதார, பண்பாடு, கலாச்சார பின்தங்கிய நிலையே. 23.08.2001ல் அரசுப்பணியில் சேர்ந்த எனக்கு 10.06.2010 முதல் இப்பள்ளியில் பணிபுரிய வாய்ப்புக் கிட்டியது. தற்போது 40க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உருவெடுக்க இச்சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இக்கட்டுரையின்கண் காண்போம்.
நல்லொழுக்கத்தினால் தன்னம்பிக்கையை வளர்த்திட்ட மாணவர்கள் சீருடையே மாணவனின் சின்னம் என்பதால் அப்போது தலைமையாசிரியராக இருந்த திரு. மனோகரன் அவர்களின் அனுமதியின் பேரில் சீருடை சரிவர அணியாத சிறுவர்களை காலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு முன்பே கண்காணித்து வீட்டிற்கு அனுப்பி மாற்றிவர கண்டித்ததால் இன்று எங்கள் பள்ளியில் வாரம் 3 விதமான சீருடைகளை அணிகின்றனர். காலணியே இல்லாமல் இருந்தவர்கள் காலணி அணிந்து மிடுக்காக வருகை புரிகின்றனர்.
மாணவர்கள் பாடநூல்களையும் நோட்டுப்புத்தகங்களை யும் பொறுப்பின்றி கிழித்து பள்ளி வளாகமே காகிதக் குப்பையால் பறப்பதைக் கண்டு மாணவர்களுக்கு அட்டையையும் வாங்கி அட்டைப் போட்டு பின்னால் அவர்களுக்கு பிடித்தக் குறிப்புகளை எழுத வைத்ததால் இன்று ஏடுகளை பத்திரமாக பயன்படுத்தக் கற்றுள்ளனர்.
மாணவர்கள் வறுமையின் காரணமாக எழுதுபொருள்கள் எடுத்து வருவது அபூர்வம். அவ்வாறே எடுத்து வந்தாலும் அவற்றை விரயம் செய்து எழுதத் திண்டாடினார்கள். அவர்களுக்கு மை பேனாக்களை யும் மையையும் பள்ளியிலேயே வழங்கியதால் ஆரம்ப காலத்தில் மையை அங்கும் இங்கும் சிந்தி அலங்கோலம் செய்தனர். இன்றோ அழகான கையெழுத்தினால் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றனர். இதனால் பெருமளவு நெகிழிப் பயன்பாட்டையு ம் குறைத்துள்ளனர். மாதமாதம் கையெழுத்துப் போட்டி முகநூலில் நடத்தி சிறப்பான கையெழுத்து எழுதுபவருக்கு மை பேனாவினை பரிசாக வழங்குவதால் இன்னும் அழகூட்டி வருகின்றனர் .
சுத்தம் என்றால் என்னவென்று அறியாத எம்மாணவர்கள் தலை சீவாமல், நகம் வெட்டாமல், அழுக்கான உடையுடன் இருக்க நான் அம்மாணவர்களைத் தொட்டு சீர்செய்து உறவாடுவதை சகஆசிரியர்கள் அருவருப்பாக பார்த்தனர் . ஆனால் தினமும் பள்ளியிலேயே நகம் வெட்டுதலை சக நண்பர்கள் மூலம் செய்து பழக்கவே அனைவரும் சுத்தமாக சுதாரித்து வருகின்றனர் .
சுத்தமற்றச் சூழ்நிலையினால் அடிக்கடி உடல் நலக்குறைவினால் பள்ளிக்கு வருவது அவர்களுக்கு சிரமமாக இருந்தது. இதற்கு தீர்வாக நான் 2011 ல் அக்குப் பஞ்சர் படித்து சிறுசிறு உபாதைகளுக்கு சிகிச்சை அளிப்பதால் நோயைக் காரணம் காட்டி விடுப்பு எடுப்பதனை தவிர்த்து நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.
பள்ளிக் கழிவறை சுத்தம் ஏதோ இரு இளிச்சவாயர்கள் ஏற்று செய்ய நானும் அவர்களோடு கழிப்பறையை சுத்தம் செய்து கொண்டிருப்பதனைக் கண்டு சக ஆசிரியர்கள் உங்கள் கைக்கு தங்க வளையலே போடலாம் என்று என்னைப் பாராட்டுவதனை கண்ட நாள் முதல் மாணவர்கள் மனமுவந்து அனைவரும் கழிவறையை சுத்தமாக கையாள்கின்றனர்.
நொறுக்குத் தீனியை உண்டதனால் மதிய சத்துணவினை உண்ணாமல் வாரி வீசிய மாணவர்களுக்கு உணவின் முக்கியத்துவம், உணவு உண்ணும் முறை முதலியவற்றை சிறுசிறு கதைகளாக கூறி உணவு வேளையில் கண்காணித்து வருவதால் அன்று சுருங்கி இருந்த அவர்களது குடல்கள் இன்று விரிந்து உணவை வீணாக்காமல் உண்டு உடல் நலத்துடன் திகழ்கின்றனர்.
மேலும் பள்ளிக்கு 6 வருடங்களுக்கு முன் யோகாப்பயிற்சி கற்றுத் தர வந்த பயிற்றுனர் இந்த பிள்ளைகளுக்கு கட்டுப்பாடே கிடையாது. இந்தச் சேரி மாணவர்களுக்கு யோகா வராது எனக் கூறி ஒதுங்கினார்.ஆனால் அதே மாணவர்களுக்கு மெல்லிசைப் பாடல்களுடன் கற்பித்ததால் இன்று இவர்கள் சிறப்பாக நுணுக்கத்துடன் செய்து மனக் கட்டுப்பாட்டை வளர்த்துள்ளனர்.
முதன் முதலில் (2010ல்) மாணவர்களை Turn your book என்ற போது திரும்ப புத்தகத்தை திருப்பாமல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அவ்வாறே திரும்பக் கூறச் சற்று அயர்ந்து போனேன். அதனால் தினமும் காலை 9.00-9.30 வரை 1-8 வகுப்பு மாணவர்களுக்கு SPOKEN ENGLISH
சிறப்பு வகுப்புகள் நடத்தினேன். சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பினையும் வேண்டினேன். ஒருவர் நான் தமிழ் ஆசிரியர் என்றும் மற்றவர் நான் ஆங்கிலத்தில் பேசினால் உடல் நலம் சரியில்லாமல் ஆகிவிடுகிறது என்றும் கூற சவாலாக எண்ணி தினமும் பல யுத்திகளை கையாண்டதனால் இன்று எம்மாணவர்கள் நன்றாக ஆங்கிலத்தில் கலந்துரையாடி அசத்தி வருவது ஆங்கில ஆசிரியரான என் மனதிற்கு இதமாக இருக்கிறது.
தேர்வு என்பது மாணவரை அச்சுறுத்துவதாக இல்லாமல் அவர்கள் ஏற்கனவே கற்றவற்றை நினைவு கூறுவதாக இருக்க வேண்டும் என்பதால் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் சிறு தேர்வுகள் அளித்து வருகின்றேன். மாணவர்கள் தங்களுக்கான கேள்வியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவரவர் கற்கும் வேகத்திற்கேற்ப பதில் எழுதலாம். முதலில் முடிப்பவர்களுக்கு கணினி, மடிக்கணினி மற்றும் செல்பேசிகளில் TUXTYPE, JELABI, WORDTRIP, TRICKY WORDS,CHESS பயன்படுத்தி கற்கலாம் என்றுக் கூறவே மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் தேர்வை எதிர்கொள்கின்றனர்.
·சமூக அக்கறைக் கொண்ட எம்பள்ளி மாணவர்கள் :
இளம்பிஞ்சுகள் சிலர் தவறு என்று அறியாமல் தாய், தந்தையர் இருவரும் சுவைத்த எஞ்சியுள்ள பான்பராக், மது, பீ டி, சிகரெட், புகையிலை போன்ற போதை பொருட்களை ருசித்து பள்ளியில் மல்லாடுவதையும், பெற்றோர்கள் குடித்து விட்டு பள்ளிக்கு வர மற்றவர் கேலியால் பிஞ்சு மனது படும் வேதனையையும் கண்டு நானும் 5 மாணவர்களும் சேர்ந்து தலைமையாசிரியரின் வழிகாட்டுதலில் செய்த மாற்றம் என்பது சாத்தியமே SAY NO TO DRINKS செயல் திட்டம் 8 பேரை குடியை கைவிட தூண்டியது. மேலும் மாணவர்கள் போதை பாதையின் கொடுமையை சமுதாயத்திற்கு பறை சாற்றி பள்ளி வளாகத்திற்கு அருகிலுள்ள மதுக்கடையை பெற்றோர் உதவியுடன் அமைதி வழியில் போராடி இப்பகுதியை மதுக்கடை இல்லா ஊராக்கி மாபெரும் வெற்றியும் கண்டு மகிழ்ச்சியுடன் இருக்கின்றோம்.
பணத்திற்காக கொலை, கொள்ளை, திருட்டு என்று வாழ்ந்து வரும் சூழலில் மாணவர்கள் ஆசிரியரது பர்ஸிலேயே கை வைத்தனர்.பள்ளியிலிருந்த பீரோ பூட்டை உடைத்தனர். விடுமுறை நாட்களில் பூட்டிய வகுப்பறையை திறந்து புத்தகத்தின் மீது மலம் கழிப்பது, குடிநீர் தொட்டியில் உள்ளாடைகளுடன் குளிப்பது, கழிவறையை யாரும் பயன்படுத்தாத படி பல அட்டூழியங்கள் செய்வது ,வளாகத்தை பாழ்படுத்துவதுமாக இருந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் தனியாக மேற்கொண்டதனால் ஏற்பட்ட மாற்றங்கள் ஏராளம். கட்டுரை எழுதுதல், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல், பள்ளி காய்கறி தோட்டம் அமைத்தல், பங்கிட்டு உண்ணுதல், எளிய கை வேலைப்பாடுகள், கணினி செயல்பாடுகள், விளையாட்டு, மெல்ல கற்போருக்கு வழிகாட்டுதல் போன்ற செயல்களினால் இன்று பள்ளி என்ற சமுதாயத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.
We Are Ready to Read English, Speedy Speakers of Bettatti, Beautiful Bettatti Buddies, Healthy Homework, ஆங்கில நாளிதழினை விரும்பி படிக்கும் அரசுப் பள்ளி தமிழ் வழி மாணவர்கள் என்பன போன்ற செயலாராய்ச்சிகளை மேற்கொண்டு ஆங்கில மொழிப்புலமையை வளர்த்து வருவதால் பணத்தையே குறிக்கோளாக்கி வேலை வேலை என்றிருந்த பெற்றோர்கள் பள்ளியின் முன்னேற்றத்திற்காக மாதா மாதம் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழுவில் தவறாது பங்கேற்கின்றனர். பள்ளியின் வளர்ச்சியில் பெரும் பங்களித்து வருகின்றனர்.
வீட்டுப்பாடம் என்றச் சொல் அனைவரையும் உறைய வைக்கின்றது. பள்ளியில் ஆசிரியர் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி தண்டனை தருவார் .வீட்டில் பெற்றோர் வீட்டுப்பாடம் என்ற பெயரில் மாணவர்கள் விளையாடக்கூடச் செல்லாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பர் .மாணவனோ தலை கீழாக புத்தகத்தை வைத்து சிந்தித்துக் கொண்டிருப்பான். 18மாணவர்களை வைத்து செய்த HEALTHY HOMEWORK செயலாராய்ச்சியினால் Healthy Homework
ஆங்கிலத்தில் வீட்டுப்பாடமே நான் வழங்குவதில்லை .கல்லாத பெற்றோரின் வீட்டில் மாணவர்கள் சென்று படிக்க ,கற்ற பெற்றோர் அம்மாணவர்களை கண்காணித்து வர தினமும் ஒரு மணி நேரத்தில் அனைத்துப் பாடச்செயல்களையும் துரிதமாக மாலை 5மணி யிலிருந்து 6 மணிக்குள் செய்து நன்மதிப்பைப் பெற்றனர். ஒவ்வொரு வீட்டினரும் மாணவர்கள் வருகைக்காக தேநீர், பிஸ்கட்டுடன் காத்திருந்தனர். மாணவர்களால் இன்று பள்ளி, வீடு இணைந்தது .ஆசிரியர் தினவிழாவை 2014 ல் சமுதாயம் கொண்டாடியது.
நாட்டுப்பற்றுடன் விளங்கும் நாளைய தலைவர்கள் :
பள்ளியில் இளம் செஞ்சிலுவை சங்கத்தில் 6 முதல் 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்று அனைவரும் சகோதரர்கள் என்ற மனப்பான்மையினை வளர்த்து வருகின்றனர்.
பொருளாதார நிலை உயர வெம்மை உடைகள் (scarf, cap) , தரைவிரிப்புகள், வாழ்த்து அட்டைகள், மாலைகள் எனவும் தேவையற்ற பொருட்களைக் கொண்டு செய்யும் கைத்தொழிலையும் கற்று அதன் மூலம் ஈட்டும் பணத்தினை அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு வழங்கி அவர்கள் ஆசியுடன் சந்தோஷமாக இருக்கின்றனர்.
பள்ளியில் புதர்காடாக இருந்த இடத்தை பண்படுத்தி அழகானதொரு காய்கறித் தோட்டம் அமைத்து கீரை ,காய்கறிகளை இயற்கை உரங்கள் இட்டு, மரங்களையும் வளர்த்து சுற்றுச்சூழலை பேணிக் காத்து வருகின்றனர்.
பள்ளிக்கு மருத்துவர்களையும் சாலைப் போக்குவரத்து காவலர்களையும் தீயணைப்புத் துறையினரையும் அழைத்து விழிப்புணர்வு முகாம் நடத்தி நாட்டு மக்களுக்கு சேவை புரிகின்றனர்.
மருத்துவமனைகளுக்கும் அருகாமை பள்ளிகளுக்கும் இளம் செஞ்சிலுவைச் சங்கப் (JRC ) படையினர் பார்வையிடச் செல்வதால் விசாலப் பார்வையுடன் சுயமதிப்பீடு செய்ய அறிந்துள்ளனர்.
பாட இணைச் செயல்பாடுகளினால் மாணவர்கள் பள்ளி விழாக்களில் நாட்டுத்தலைவர்கள், அவர்களது தியாகங்களை சரளமாக எடுத்தியம்புகின்றனர். ஆரம்பத்தில் மைக் (mike) முன் வர தயங்கிய மாணவர்கள் பள்ளி விழாக்களை முன்னின்று ஆசிரியர் துணையுடன் செய்து வருவதனை கண்ட வட்டாரக் கல்வி அலுவலர்களால் பல இடங்களில் பேசப் பட்டு பாராட்டப் படுகின்றனர். வாரா வாரம் குழுப்பாடல், நாடகங்கள், நடனம், பூக்களின் அலங்காரம், அறிவிப்புப் பலகை ஒப்பனைப் போட்டி, வினாடி வினா, மாறுவேடப் போட்டி ,சுவரொட்டிகள் தயாரித்தல், கதை கூ றும் போட்டி, பேச்சுப் போட்டி, கையெழுத்துப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி, பொன் மொழிகள், பாட்டுக்குப் பாட்டு, காகித வேலைப்பாடு, படம் வரைதல், கோலப் போட்டி ,வார்த்தை ஜாலங்கள் நடத்தப் பட்டு வெற்றிப் பெற்றோருக்கு பிரார்த்தனை கூட்டத்தில் அங்கீகாரமும் வழங்கி ஊக்குவிப்பதால் அவர்களது திறமைகளை வெளிக் கொணர்ந்து ஆளுமைப் பண்பைப் பெற் று திகழ்கின்றனர்.
ஊட்டி மலர் கண்காட்சியில் 2012 கலாச்சார நடனங்களில் பங்கேற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். மாவட்ட அளவில் இரண்டு முறை சிறந்த கிராமப்புற நடனம் ஆடி பரிசுப் பெற்றனர். வட்டார அளவில் பல பரிசுகளை குவித்து பள்ளியின் பெருமையை நிலை நாட்டி வருகின்றனர்.
முடிவுரை :
எதிர்காலத்தில் மாணவர்களை பண்புள்ள, வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புள்ள பட்டதாரிகளாக உருவாக்க வேண்டும் என்பதே எனது இலட்சியம்.
இலட்சியப் பாதையில் வந்துள்ள பட்டதாரிகளின் ஒத்துழைப்புடன் தொடரும் சமுதாய தேடலுடன் இலட்சியப் பாதை !!! பள்ளி மாற்றப்பட்டாலும் BEST PRACTICES of BETTATTI வாட்ஸ் ஆப் மூலம் இலக்கை நோக்கி இலட்சி யப்பயணம் தொடரும்…
Lovable Teacher of Nilgiri
You are the greatest treasure to the students' community,mam.
ReplyDeleteKeep up your good spirits, mam
Hats off to u mam
ReplyDeleteஆயிரம் காலால் நடக்கும் ஆறுகள்!
ReplyDeleteஇந்த சமுதாயம் பெற்ற பேறுகள் நீங்கள்!
உங்களைப் போன்றோரின் பணி எங்களை மேலும் உற்சாகப்படுத்துகிறது.
உங்கள் பணி கண்டு மெய்சிலிர்த்தோம்.
தொடரட்டும் உங்கள் சேவை!
Great to read your achievements, congratulations
ReplyDeleteCongratulation and continue doing the best of works 💐
ReplyDelete